நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன் - (யோவான் - 14:13).
ஐந்து வயது நிரம்பிய சிம்சோன், தன் தாயுடன் தனது பிறந்த நாளுக்காக பொம்மை
கடைக்குச் சென்று தனக்கு பிடித்த விளையாட்டுச் சாமான் வாங்கச் சென்றான்.
அங்கு அநேக பொம்மைகளும் விளையாட்டுச் சாமானங்களும் நிரம்பி இருந்தன. அதில்
அவனுக்கு விருப்பமான, கலர்கலர் விளக்குகளுடன்
விதவிதமான சத்தங்களுடன் வேகமாய் செல்லும் கார் இருந்தது. அதைக் கண்டவுடன்
அவன் தன் தாயிடம் அடம் பிடித்து இந்த கார்தான் எனக்கு வேண்டும் என்று
கேட்டு தொந்தரவு செய்தான். தாயும் பார்க்கலாம் என்று கூறி விட்டு பின்பு
வீடு திரும்பினார்கள்.
அடுத்த நாள் பிறந்தநாள் பரிசாக அவன்
விரும்பிய அதே கார் அவனுக்கு கொடுக்கப்பட்டது. அதைக் கண்ட அவனுக்கு
சந்தோஷம் தாங்க முடியவில்லை. அப்பொழுது அவன் சகோதரன் 'அட மடையா! இந்த
காருக்கே நீ இவ்வளவு சந்தோஷப்படுகிறாயே, அம்மா உனக்கு இதைவிட பெரிதான
ரிமோட் கண்ட்ரோல் கார் வாங்கி கொடுக்க இருந்தார்கள். ஆனால் நீ இதை வாங்க
வற்புறுத்தியதால் இதை வாங்கிக் கொடுத்தார்கள்' என்றான். அதைக் கேட்டபோது
சிம்சோனின் இருதயம் கனத்தது. இதைப் போலத்ததான் நாம் தேவனிடம் நமது தேவையை
கதறி, கெஞ்சி கேட்டுப் பெற்றுக் கொள்கிறோம். கர்த்தரும் அதைத் தருகிறார்.
ஆனால் தேவன் ஒருவேளை நாம் கேட்டதைவிட நன்மையானதை கொடுக்கச்
சித்தமாயிருந்திருப்பார். ஆனால் நம் ஜெபம் அதை தடை செய்திருக்கும். நாம்
ஜெபிக்கும்போது 'உம்முடைய சித்தத்தின்படி எங்களுக்கு வாய்க்கச் செய்யும்'
ஆண்டவரே என்று அவருடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து ஜெபிக்கும் போது
அவர் நன்மையானவற்றையே நமக்கு தர வல்லவராயிருக்கிறார். நம் தேவனுக்கு
கொடுக்க முடியாத பெரிய தேவை என்று ஒன்றுமில்லை. ஆகையால் பெரிய
காரியங்களுக்காக ஜெபிப்போம் பெரிய பதிலை பெற்றுக் கொள்வோம். ஆமென்
அல்லேலூயா!
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம் சித்தம் போல்
நடத்திச் செல்லுமையா
ஆவியானவரே... ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக பிதாவே, இந்த நாளுக்காக உமக்கு ஸ்தோத்திரம். பெரிய
தேவனிடமிருந்து பெரிய காரியங்களை பெற்றுக் கொள்ள எங்களை எழுப்பி ஏவும்.
எங்களது தேவைகளுக்காக மட்டுமல்ல, எங்களது தேசத்திற்காக பெரிய காரியங்களை
செய்ய, பெற்றுக் கொள்ள உதவும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில்
கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்
எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
No comments:
Post a Comment